தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் கனரக இயந்திரங்கள், பல லட்சங்களில் முதலீடு என்றுதான் இருக்க வேண்டுமா என்றால், நிச்சயம் இல்லைதான். நம் அன்றாட வாழ்வில் கண்ணில் காண்பவை எல்லாமே ஏதோ ஒரு தொழில் துறையில், பெயர் அறியாத பலரின் உழைப்பால் உருவானவை தான். ஒரு தொழிலில் ஈடுபட்டு அதனை முறையாக கவனிக்க வேண்டும் என்றால் நாமும் அந்த தொழில் துறையை சார்ந்த இடத்தில் வசிப்பது தான் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும். அப்படி இருக்க, நாங்கள் கிராமப்புறத்தில் வசித்து வருகிறோம், நாங்கள் என்ன மாதிரியான தொழில் தொடங்க முடியும்? எங்கள் வீடு மற்றும் வயலை விட்டு எங்களால் இடம் பெயரவும் இயலாது. கடுமையாக உழைக்க தெரிந்த எங்களுக்கு பெரிய படிப்பறிவும் இல்லை. எங்களால் முதலீடும் பெரிய அளவில் போட இயலாது. எங்கள் கிராமத்திலேயே தொழிலைத் தொடங்கி நடத்தும் வகையில் என்ன தொழில் இருக்கிறது? நாங்களும் தொழில் தொடங்க முடியுமா?, என்று பல கேள்விகளை கிராமப்புற இளைஞர்களும், தொழில் துறையில் ஆர்வம் கொண்ட பலரும் கேட்கிறார்கள்.
கிராமப்புறம் மட்டுமில்லை, புறநகர் பகுதிகளிலும் இந்த மாதிரி தொழில் துறை மீது ஆர்வம் கொண்டு, தொழில் தொடங்க வழி இன்றி தவிக்கும் மக்களுக்காகவே இந்தப் பகுதி.
நாங்கள் சொல்ல இருக்கும் தொழிலுக்கு பண முதலீடு குறைவு தான். ஆனால், சந்தையில் நல்ல மதிப்பு. பெரிய அளவு பராமரிப்பு செலவு தேவை இல்லை. இதை ஒரு பகுதி நேர வேலையாகக் கூட நீங்கள் செய்யலாம். ஆனால் அந்த தொழிலையே பிரதானமாக செய்தாலும் அதற்கான லாபத்தை நீங்கள் ருசிக்க முடியும். அந்த தொழில் என்ன? யார் சொல்லித் தருவார்கள்? மற்றவர்களுக்கு தொழிலைக் கற்று தருவதையே ஒரு தொழிலாகக் கொண்டு, அந்த தொழில் சம்பந்தமாக தன்னைத் தேடி வருபவர்களுக்குச் சரியான பயிற்சியையும், அந்த தொழிலுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து வரும் டாக்டர். வில்லியம் ஜேம்ஸ் தான் மற்றவர்களுக்கு தொழிலைக் கற்று தரும் தொழில்முனைவோர். தன்னைப் பற்றியும், அந்தத் தொழிலைப் பற்றியும் நமக்காக சொல்ல வருகிறார், வாருங்கள் கேட்போம்.
“என் பெயர் வில்லியம் ஜேம்ஸ். எனக்கு சொந்த ஊர் ராஜபாளையம். நான் தாம்பரம் எம்.சி.சி. கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்றேன். அதற்கு பின் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். பிறகு சென்னை லயோலா கல்லூரியில் தாவரவியலில் ஆராய்ச்சி செய்தேன். அதன் பின் என் படிப்பு சம்பந்தமான ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் நாம் செய்யும் தொழிலால் மற்றவர்களும் பயன்பட வேண்டும் என்று நினைத்தேன். அதன் பிறகு பலகட்ட யோசனைகளுக்குப் பிறகு நான் தேர்வு செய்த தொழில் தான், வண்ண மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீக்கள் வளர்ப்பு.
இது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டேன். பிறகு இந்தத் தொழிலின் உற்பத்தியின் சந்தை நிலையை அறிந்துகொண்டேன். இந்த தொழில் சம்பந்தமாக மக்கள் மத்தியில் ஆர்வம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அது தொடர்பான தகவல்களை சொல்லித் தர ஆட்கள் இன்றி இருந்தார்கள். அதனால் நான் அது தொடர்பான பயிற்சிகளையும், அடிப்படைத் தேவைகளையும் வழங்கும் ஒரு சேவை சார்ந்த தொழிலைத் தொடங்கினேன்.
தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் விவசாயிகள், குடும்பப் பெண்கள், இளைஞர்கள், என பலர் என்னைத் தேடி வருகிறார்கள். வண்ண மீன்கள், காளான், தேனீக்கள் வளர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகளை நான் நடத்துகிறேன். மற்றும் அது தொடர்பான அடிப்படை வசதிகளையும், சந்தைப்படுத்தும் முறையையும் அவர்களுக்கு சொல்லி தருகிறேன்” என்றார் அவர்.
வண்ண மீன் வளர்ப்பை பொறுத்த வரையில் இன்றைய கால கட்டத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. பெரிய வணிக நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், சிறிய, பெரிய கடைகள், வீடுகளில் கூட வாஸ்துக்காகவும், அழகுக்காகவும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. மீன் வளர்க்கும் முறைகளை கற்றுத் தருகிறோம், அதற்கான மீன் குஞ்சுகளையும் நாங்களே வழங்குகிறோம். அதனை சந்தைப்படுத்தும் முறைகளையும் நாங்கள் சொல்லி தருகிறோம். அதற்கு தகுந்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
நீரிழிவு நோய்க்கு காளான் ஒரு சிறந்த மருந்து ஆகும். ஆனால் சந்தையில் காளான் பெருமளவில் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் அதன் உற்பத்தி மிகவும் குறைவு. அந்த உற்பத்தியை பெருக்கும் ஒரு நல்ல சாகுபடியாக இந்த காளான் வளர்ப்பு இருக்கும். அதிகம் கிராமப் புற விவசாயிகள் இதில் ஆர்வமாக உள்ளனர். இந்த காளான் வளர்ப்புக்கு சிறிய அளவு இடமே போதுமானது. இந்த காளான் வளர்ப்பு சம்பந்தமான பயிற்சி மற்றும் தகவல்களை நாங்களே கொடுக்கிறோம்.
தேனின் மருத்துவ குணமும், மகிமையையும் நாம் அறிந்ததே. அந்த தேனீக்கான தேனீக்கள் வளர்ப்பு பற்றிய பயிற்சியும் அளிக்கப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில் கூட பொழுதுபோக்கிற்காகவும், சொந்த பயன்பாட்டுக்காகவும் தேனிக்கள் வளர்க்கப்படுகின்றன. கிராமப் புறங்களில் இதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. தேனீக்கள் தங்குவதற்கு ஏதுவான பெட்டிகளை தயார் செய்தல் போன்ற முழு பயிற்சியையும் நாங்கள் கொடுக்கிறோம்.
மேற்கண்ட தொழில்களை செய்ய படிப்பறிவு என்பது தேவை இல்லை. குறைந்த அளவே முதலீடு மற்றும் சிறிய அளவு இடமே போதுமானது. அதிக அளவு பராமரிப்பும் தேவை இல்லை. உழைப்பு மட்டுமே தேவையானது. இந்தத் தொழிலில் நாம் கொண்டிருக்கும் ஈடுபாட்டிற்கு ஏற்ற லாபத்தை நாம் காண இயலும். இதனை கிராமப்புறங்களிலும், மலைப்பகுதிகளிலும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புவோர்களுக்கும், சந்தைப் படுத்துதலில் சாமர்த்தியம் உள்ளவர்களுக்கும், மிக ஏற்றத் தொழில் இது. வங்கிக் கடன் பெறும் அளவிற்கு பெரும் முதலீடு இதற்கு தேவையில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற தொழில் செய்து நீங்களும் வாழ்வில் வெற்றி பெறலாம்
மிகக் குறைந்தக் கட்டணத்தில் எல்லா விதமான உபகரணங்களுடன் இந்தத் தொழில்களை நீங்களும் கற்றுக்கொண்டு, தொழில் முனைவோர் ஆகலாம்.
ஆதாரம் : வில்லியம் ஜேம்ஸ் - தொடர்புக்கு: 9789860119
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
சுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம் பற்றிய...
சுயதொழில் புரிவோருக்கான ஆலோசனைகள் இங்கு கொடுக்கப்ப...
உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு உதவும் இந்திய பயிர்...
கயிறு தொழில் முனைவோர் திட்டம் - காயர் உத்யமி யோஜனா...